உன் கண்ணீரால்

Saturday, September 23, 2006

நம்பு!நான் எதுவும் அறியேன்,



இன்னுமொரு கொலை நாள்!
படுவான்கரைகளில் எக்ஸ் - எக்ஸ் அம்மான்
தன் அண்ணரைத் தேடி அலைகிறார்
அண்ணன் பெம்மானை…
அங்குமிங்குமென
அண்ணனும் தம்பியும்
தம் எதிரியரைத் தேடித் திரிகிறார்
நான் என்னைத் தேடுகிறேன்
கொலைகள் எனது கனவை அழித்தன
கொலைகள் எனது இரவை அழித்தன
என்னுடைய இருபத்தோராவது பிறந்த தினத்திற்கு
சில நாட்களுக்கு முன்
அவர்கள் என்னை அழிக்கு முன்
புறநானூறும் கந்தபுராணக் காவியங்களும்
எனது வீட்டில் தீக்கிரையாகின
என் கைகளின் இரத்தக் கறைs
தீ மூட்டிய
உன் கண்ணீரால் கரைந்து அழிய
அதை உன்னிடம் தந்திருந்தேன்
ஏனோ அது அழியவில்லை
அதிகாரத்தைப் பழி சொல்லி
வெறித்தவுன் நேரிய பார்வை
வீழ்த்தப்பட்ட என்னிடம் வருத்தம் தருகிறது

நம்பு!
நான் எதுவும் அறியேன்
,வீடு திரும்பிய ஓர் அதிகாலையில்
படலையில்
என்னைச் சுட்டுச் சென்றது கூட
“அவரா“ “இவரா“ தெரியாது
என் இருபத்தோராவது பிறந்த தினத்திற்கு
சில நாட்களுக்கு
முன்உடலிற் பொட்டுத் துணியோ
என்றாவது முத்தமிடப்பட்டதாய் ஞாபகமோயில்லாது
அல்லது
யாருமே ஏன் முத்தமிடவில்லை? என்ற தீராக் கேள்வியுடன்
அதன் வலி அதிர
முகம் அற்ற
ராணுவம் வெட்டிப் போட்ட
முண்டங்களில்
தெகியோவிற்ற, தெரணியகலை
இரப்பர் தோட்டங்களில்
அல்லைப்பிட்டியில்
பத்திரிகை அலுவலகங்கள் வரை
வீழும் உடல்கள் முன்
நீ தலையிலடித்தழுவது
பிரயோகிக்கப்படாத குறிகளுக்காக

நீலம் பாரித்து வரண்டிரா
சாவுக்கு முந்தைய காலத்து
அழகிய உதடுகளால்
என்றுமே அறியப்படா ஆசை முத்தத்திற்காக..

ஓர் இனிய முத்தம் - அது இவ்
உதட்டுத் தசைகளில் எப்படி உணரும்?
நம்பு
வாளால் வெட்டப்பட்டபோது
துவக்கால் சுடப்பட்டபோது
கொட்டான்களால் தாக்கப்பட்டபோது
எனது இதயம் அழுததும் அதற்காகவே!
எவருமே கண்டிரா
எனது நிர்வாணப்பட்ட உடல்
ஓர் பிரச்சாரக் கருவியாகி
பிரசுரிக்கப்பட்ட போதிலும்
நான் அழுதது அதற்கே…
போகும் திசையறியாப் போரின் கண்ணிகளுள்
எதையும் சொல்ல வாய்ப்பின்றிப் போய்
கழுகு தின்னத் தீனியாக
இந்த வீதியில் போட்டுக் கிடப்பவன்
எப்படி நானாக முடியும்?

சைக்கிளை மிதித்துக் கொண்டு
பிரதேசத்தின் வயல் வெளிகளில்
இன்னுமொரு கொலைநாளில்
ஓர் இன்னுமொரு கொலைநாளில்
உல்லாசமான பாடல்களின் சீட்டியடிப்புகளின்றி
வதைமுகாம்கள்இராணுவ முகாம்கள்
சோதனைச் சாவடிகள் ஊடு
முகமூடி“யாரோ”
எதிர்ப்படும் கணம் வரையில்
இரண்டு சகாப்தங்களாய்
யாராலோ கொல்லப்படுவதற்காகவே
காலங்கள் சுழலும் தெருவில்
போய்க் கொண்டிருக்கிறேன்
- க.யசோதரா